Tuesday, December 27, 2011

காலடித் தடம்

கண்ணும் கருத்துமாய் 
காத்து வருகிறேன் 
உன் காலடித் தடத்தை கூட!!!

Wednesday, November 30, 2011

பிடி சோறு கொள்கை!!!


ஏர் கொடுத்தவனுக்கு ஊரும்
ஏர் பிடித்தவனுக்கு கைப்பிடி சோறும்
எத்தனை நாளுக்கு!
உழைத்துத் தேய்பவன்
புழுதியிலும்
உட்கார்ந்து கொழுத்தவன்
கோடியிலும்
புரல்வதெப்படி?

ஆண்டையெல்லாம் அடுக்கு மாடியில்
அடிமையாய் நீ தெருக்கோடியில்.
நீ உடைத்த கல்லெல்லாம்
கடவுளாக
படைத்த நீ மட்டும்
கைகட்டி கையெட்டா தூரத்தில்.
நீ சுமந்த மண்ணெல்லாம்
மாளிகையாக,
நீ மட்டும் செம்மண் தரையிலும்
செந்தழல் புகையிலும்.
நீ விதைத்த விதையெல்லாம்
முதலாளி கழுத்து வரை உணவாக
உனக்கு மட்டும்
கால் வயிறும் அரை வயிறும்.

ஒட்டிய கன்னத்திலும்
ஒடுங்கிய வயிற்றிலும்
தெரியாதது
முப்பத்துரெண்டு ரூபாயில் தெரிகிறது
-உன் வறுமைக்கோட்டின் அளவுகோள்!

ஆண்டையாய் இருந்தவன் ஆள்பவனாய்
பண்ணையாராய் இருந்தவன் தொழிலதிபனாய்
கால ஓட்டத்தில் பெயர் மாறி
உரு மாறாதிருக்க
நீ மட்டும் அன்றும் இன்றும்
கூழை கும்பிடு போடும்
கூலிக்காரனாய்
ஏவலுக்குக் காத்திருக்கும்
ஏமாளியாய்!

விதைந்த நெல் தொலைந்து போகட்டும்
விதை நெல் என்றும்
உன் வசமே இருக்கட்டும்.
உழைப்பவன் வசமே
உருவாக்கமும் இருந்தால்
உழைப்பவன் கையே ஓங்கியிருக்கும்.

கையளவு நீரை
தீக்குச்சி நெருப்பு பொசுக்காதுதான்,
புரிந்து கொள் தோழா
எரிமலை வெடித்தால்
சமயத்தில் சமுத்திரமும்
ஆவியாய் போகலாம்,
தீக்குச்சி போதும் 
தீக்கூட்டம் பற்றும்.
பற்ற வைப்போர் வருவாரென காத்திருக்காதே
பற்ற வைப்போம் மற்றவர் வருவாரென
துணிந்து நில்
எரிமலையும் வெடிக்கும்,
பொதுவுடமையும் பிறக்கும்.

Thursday, November 3, 2011

நீர்த்துளி!!!


கைநீர் அள்ளி முகம் கழுவினேன்,
முகந்துடைத்தேன்,
கைத்துடைத்தேன்.
ஒளிந்து கொண்டன சில துளிகள்
என் கைரேகை இடுக்கில்!!!

Thursday, October 27, 2011

முயற்சி கொள், முடிவில் வெல்!!!

தொடுக்கப்பட்ட அம்பெல்லாம்
இலக்கை கொய்வதில்லை,
விடுக்கப்பட்ட கேள்விக்கெல்லாம்
விடை கிடைப்பதுமில்லை.
தொடுப்பதும் விடுப்பதும்
முடிவாக அல்ல
முயற்சியாக!

பூத்த பூ
பூமி சுற்றும் வரை
வாழ்வதில்லை.
பூ உதிர்ந்தால்
பூ சுமக்கும் செடி
மரிப்பதில்லை.
பூ பூப்பது
மடிவதற்காக அல்ல
மணப்பதற்காக!

கட்டும்போது
தாங்கும் மலரே
மாலையாகிறது.
வெட்டுப்பட
ஏங்கும் மரமே
வாசல் நிலையாகிறது.

வலியில்லா வாழ்க்கை
வளம் பெறுமா?
வலியில்லா வாழ்வுதான்
வலி பெறுமா?

தோல்வியின் விளிம்பில்தான்
வெற்றியின் வேர்கள்
தொடங்குகின்றன.
தோல்வியில் மிரண்டால்
வெற்றியின் விதைகள்
வேர் விடுவதில்லை.

வெட்ட வெட்ட நீள்வோம்...
தோல்வி தோற்கும் வரை
வெற்றி கிட்டும் வரை!!!

Wednesday, October 19, 2011

என் கவிதை வரும் நேரம்


எழுத நினைக்கும் போதெல்லாம்
நீ என்னிடம் வருவதில்லை,
கூட்ட நெரிசலிலும்
ஓட்ட அவசரத்திலும்
அவ்வப்போது வந்து செல்கிறாய்.
தலைப்பிட்டு தொடங்கினால்
தலைப்பின் எதிர்புறம் செல்கிறாய்.
முடித்து விட்டு தலைப்பை தேடினால்
முரண்பாடாய் நினைவில் வருகிறாய். 
முதல் வரியில் அழகாய்
முளைவிடுகிறாய்
முன்னோக்கி எதனால் நகர மறுக்கிறாய்?
எதிர்பாரா தருணங்களில்
நிமிடங்களில் நிரம்பி விடுகிறாய்,
காத்துக்கிடக்கையில்
சுலபத்தில் சிக்க மறுக்கிறாய்.
உள்ளிருப்புப் போராட்டமெல்லாம்
நடத்திப்பார்க்கிறாய்!

உணர்ச்சிக் கவிதை எழுத நினைத்தால்
புணர்ச்சி வரிகளாய் வந்து நிற்கிறாய்,
எழுச்சி வரிகள் தேடி திரிந்தால்
கிளர்ச்சி வரிகளாய் சிரித்து செல்கிறாய்.
நிலவுடமையில் நுழைந்து
பொதுவுடமையை கையிலெடுத்தால்
பெண் இடையில் கொண்டு போய் சேர்க்கிறாய்,

வார்த்தையாய் நீ வரும் போது
சேகரிக்க தாள் கிடைப்பதில்லை
தாள் கிடைக்கும் நேரம்
பேனா மை கிடைப்பதில்லை
எல்லாம் இருக்கும் நேரம்
எனோ நீ வருவதில்லை.
எப்படியோ உன் ஒத்துழையாமையாலும்
இன்று எனக்கோர் கவிதை கிடைத்தது!!!