Wednesday, October 19, 2011

என் கவிதை வரும் நேரம்


எழுத நினைக்கும் போதெல்லாம்
நீ என்னிடம் வருவதில்லை,
கூட்ட நெரிசலிலும்
ஓட்ட அவசரத்திலும்
அவ்வப்போது வந்து செல்கிறாய்.
தலைப்பிட்டு தொடங்கினால்
தலைப்பின் எதிர்புறம் செல்கிறாய்.
முடித்து விட்டு தலைப்பை தேடினால்
முரண்பாடாய் நினைவில் வருகிறாய். 
முதல் வரியில் அழகாய்
முளைவிடுகிறாய்
முன்னோக்கி எதனால் நகர மறுக்கிறாய்?
எதிர்பாரா தருணங்களில்
நிமிடங்களில் நிரம்பி விடுகிறாய்,
காத்துக்கிடக்கையில்
சுலபத்தில் சிக்க மறுக்கிறாய்.
உள்ளிருப்புப் போராட்டமெல்லாம்
நடத்திப்பார்க்கிறாய்!

உணர்ச்சிக் கவிதை எழுத நினைத்தால்
புணர்ச்சி வரிகளாய் வந்து நிற்கிறாய்,
எழுச்சி வரிகள் தேடி திரிந்தால்
கிளர்ச்சி வரிகளாய் சிரித்து செல்கிறாய்.
நிலவுடமையில் நுழைந்து
பொதுவுடமையை கையிலெடுத்தால்
பெண் இடையில் கொண்டு போய் சேர்க்கிறாய்,

வார்த்தையாய் நீ வரும் போது
சேகரிக்க தாள் கிடைப்பதில்லை
தாள் கிடைக்கும் நேரம்
பேனா மை கிடைப்பதில்லை
எல்லாம் இருக்கும் நேரம்
எனோ நீ வருவதில்லை.
எப்படியோ உன் ஒத்துழையாமையாலும்
இன்று எனக்கோர் கவிதை கிடைத்தது!!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment