Tuesday, September 20, 2011

சிதறல்கள்

கூந்தல் !
சரிந்து விழும்
கற்றை கூந்தல்
அதை
ஒதுக்கி விடும்
ஒற்றை விரல்
அந்த ஒன்றாய்
நானிருக்கக் கூடாதா?

பூச்சூடல்!
ரோஜாவின் சிகரத்தில்
மல்லிகை!
நீ
பூச்சூடிய அழகு!

பொட்டு!
நிறம் மாறும் நிலா
உன்
நெற்றிப் பொட்டில்
குடியிருக்கும்
பொட்டு

இதழ்!
உன் செவ்விதழ் தழுவி
வருவதால்தான்
செம்மொழியாயிற்றோ
என் மொழி?

கண்கள் !
கண்ணசைவில் நீ
கதை நூறு பேசுவதாய்
நண்பன் சொன்னான்
எனக்கென்னவோ
நிற்கும் ரயிலை
கடக்கும் ரயில்
மோதுவதை போலத்தான்
இருக்கிறது
உன் மேலிமை கீழிமையுடன்
கூடும்போது!

நாசி !
ஆக்ஸிஜன் நுகர்ந்து
ஆக்ஸிஜன் வெளியிடும்
அதிசய நாசி உனதோ ?
உன் மூச்சுக் காற்றில்
வாழ்கிறதே என் உயிர்!

பருவப் பரு !
ஆணவத்துடன் அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பரு
உன் கன்னம் வேண்டுமானால்
தாங்கிக் கொள்ளலாம்
என்னால் முடியாது

கழுத்து !
காதலையும் காமத்தையும்
இணைக்கும் பாலம்தான்
உன் மெழுகு கழுத்தோ?

Thursday, September 8, 2011

ஏலம் போன விலைமகளின் ஈன ஓலம்!

நீண்ட நெடிய
என் வாழ்க்கையில்
நிறைய நடந்துவிட்டது.
வரம் வாங்கிய
வனப்பும் பொழிவும்
சாபக்கேடாய் போய்விட்டது!

கொடுத்துப் பெறுவதோ
எடுத்துக் கொடுப்பதோ
-
தாம்பத்திய காமம்!
கொடுத்த சுகத்திற்கு
வலியே கூலி
-
விலைமகள் சாபம்!

கண்டோர் எல்லாம் என்னை
விண்டு தின்றனர்
நாளும் ஒரு ஆளை
உடுத்துவதாய் பரிகாசம்
கொண்டனர்!
சுகமும் கண்டாள்
சொத்தும் கொண்டாள்
வார்த்தையில் கொண்றனர்!

உடலை வருத்தி உழைப்பு
உடலை கொடுத்து பிழைப்பு
யாருக்குத் தெரியும்
நான் இரண்டாமவள் என்று !?

செத்த உடலுக்கு
சித்திரவதை என்ன
சிங்காரம் என்ன,
மரத்துப் போனவளுக்கு
விலையாய்
பொன் வைத்தாள் என்ன
பொருள் வைத்தாள் என்ன,

நித்தம் தன்னை
மெத்தையாக்குகிறவள்
முள்ளில்தான் படுக்கிறாள்
என்பதை
யார்தான் அறிவார் !!!

Tuesday, September 6, 2011

இனியொரு உலகு செய்வோம்!!!

தனி உலகம் வேண்டும்!!!
தண்ணீர் அங்கே
பொதுவாய் வேண்டும்!
சாதிப் போரில்
சாதிகள் மட்டும்
சாகட்டும்!
மனிதம் ஒன்றே
மதம் என்றாகட்டும்!
பசித்தவன் உணவு
கைக்கெட்டும் தூரத்தில்
இருக்கட்டும்!
கொட்டும் மழையும்
கொளுத்தும் வெய்யிலும்
வேண்டுவோர் தலையில்
மட்டும் விழட்டும்!
துர் மரணங்கள்
தூர விலகட்டும்!
மூப்பொன்றே மூச்சடக்கும்
காரணி ஆகட்டும்!
உழைப்பவனுக்கும்
உழைத்துக் களைத்தவனுக்குமே
ஊர் சொந்தமாகட்டும்!
கண்ணீர் ஊர்வலக்
காரண ஆயுதங்கள்
அமைதி ஊர்வலம்
போகட்டும்!

கடைசியில்,
குருதியின் ஓட்டம்
மனிதன் உடலுக்குள்
மட்டும் இருக்கட்டும்!!!

Thursday, September 1, 2011

சிங்களம்!!!

பூப்பெய்யாத பூவையும்
புணர்வான்,
பூப்பெய்த பிணத்தையும்
புணர்வான்,
தமிழன் எனக்கு
சமமில்லை என்பான்,
தமிழச்சி
சடலமென்றாலும் அவள்
சதை சுவைப்பான்

சிங்களன் வெறியன்!!!

Friday, August 5, 2011

மணமகன் விற்பனை

நானும் ஒரு பெண்தான்
என்னுள்ளும் மாற்றங்கள்
நிகழ்கின்றன,
என்னுள்ளும் கரு
கர்ப்பம் தரிக்கிறது!
நானும் பிரசவிக்கிறேன்
எழுத்துக்களை!
அவற்றை
குழந்தை போல பாதுகாக்கிறேன்,
கடைசியில் விற்றுவிடுகிறேன்,
கல்யாண சந்தையில்
நேற்று மகனை
விற்றது போல!!!

என் கவிதை நாயகி!!!

என் விரல் புரட்டிய
பக்கங்களும்,
இமையசையா வாசித்த
எழுத்துக்களும்
அவளைப் பற்றியே!

எந்த மையில்
எழுதினாலும்
அவள் கருப்பு சரித்திரமே - என்
எழுத்துக்களாய் பிரசவிக்கின்றன!

கடலை எழுதினாலும்,
திடலை எழுதினாலும்,
இயற்கையை எழுதினாலும்,
இம்சையை எழுதினாலும்
முடியும் இடம்
அவளை நோக்கியே!

என் பக்கங்கள் எல்லாம்
எனைக் கேட்டன
எங்களுக்கு வேறு
உடுப்பே இல்லையா? என்று.
உடை இழந்து
நிர்வாணமாகிப்போன அவள்
இழந்த கலை
மீட்கும் நாள்
உனக்கு விடுதலை என்றேன்.

எழிலாய் இருந்தவள்
இன்று இல்லாது போயிருந்தாள்
என் கவிதையின்
கருப்பொருளாய் இருந்தவள்
கடைசியில்
காணாமல் போயிருந்தாள்
அவள் ஈழத் தாய்!!!