Thursday, September 1, 2011

சிங்களம்!!!

பூப்பெய்யாத பூவையும்
புணர்வான்,
பூப்பெய்த பிணத்தையும்
புணர்வான்,
தமிழன் எனக்கு
சமமில்லை என்பான்,
தமிழச்சி
சடலமென்றாலும் அவள்
சதை சுவைப்பான்

சிங்களன் வெறியன்!!!

Friday, August 5, 2011

மணமகன் விற்பனை

நானும் ஒரு பெண்தான்
என்னுள்ளும் மாற்றங்கள்
நிகழ்கின்றன,
என்னுள்ளும் கரு
கர்ப்பம் தரிக்கிறது!
நானும் பிரசவிக்கிறேன்
எழுத்துக்களை!
அவற்றை
குழந்தை போல பாதுகாக்கிறேன்,
கடைசியில் விற்றுவிடுகிறேன்,
கல்யாண சந்தையில்
நேற்று மகனை
விற்றது போல!!!

என் கவிதை நாயகி!!!

என் விரல் புரட்டிய
பக்கங்களும்,
இமையசையா வாசித்த
எழுத்துக்களும்
அவளைப் பற்றியே!

எந்த மையில்
எழுதினாலும்
அவள் கருப்பு சரித்திரமே - என்
எழுத்துக்களாய் பிரசவிக்கின்றன!

கடலை எழுதினாலும்,
திடலை எழுதினாலும்,
இயற்கையை எழுதினாலும்,
இம்சையை எழுதினாலும்
முடியும் இடம்
அவளை நோக்கியே!

என் பக்கங்கள் எல்லாம்
எனைக் கேட்டன
எங்களுக்கு வேறு
உடுப்பே இல்லையா? என்று.
உடை இழந்து
நிர்வாணமாகிப்போன அவள்
இழந்த கலை
மீட்கும் நாள்
உனக்கு விடுதலை என்றேன்.

எழிலாய் இருந்தவள்
இன்று இல்லாது போயிருந்தாள்
என் கவிதையின்
கருப்பொருளாய் இருந்தவள்
கடைசியில்
காணாமல் போயிருந்தாள்
அவள் ஈழத் தாய்!!!

Thursday, August 4, 2011

ஒட்டிய உறவு

வேண்டாம் என்று
விலகிப் போனவளை
வெறுக்காமல்
விட்டு விலகி நடந்தேன்
ஒட்டிக்கொண்டு வந்தது
அவள் தலையிலிருந்து
கொட்டிய முடியிலொன்று !!!

Wednesday, August 3, 2011

இங்கே புகை பிடிக்கக் கூடாது!!!

மழையில் அணையாமல்
சிகரெட்டை காப்பாற்றினேன்
என்னை அது
எரிப்பது புரியாமல்!

வலி(ர)தட்சணை

அடிமைகள் சந்தையில்
எனக்கான விலையை
யாரோ நிர்ணயம் செய்கின்றனர்!
அதில்
ஒரு காலத்தில்
இதே சந்தைக்கு
வந்தவளும் அடக்கம்.
இன்று பேரம் பேசுபவள்,
முன்னொரு நாள்
பேரம் பேசப்பட்டவளே!
பெண்மையின் வலி புரிந்தவள்
வாழ்வின் வழியடைப்பது ஏனோ?

Monday, July 25, 2011

வலி போகும் வடு போகுமா?

வலி கொடுத்தோர் மறக்கக் கேட்டனர்
வலி மறந்தோம் வடு மறையவில்லையே
உயிர் போகும் வலி போகும்
வலி தந்த வடு போகுமா?

அன்னை இழந்தோம்
அண்ணன் இழந்தோம்
தந்தை இழந்தோம்
தங்கை இழந்தோம்

சுடுகாடே வீடாய்
தகனக் காடே விதியென்று
நாளும் ஒரு பிணம் சுமந்தோம்
எரித்த பிணம் எரிவதற்குள்
பிணம் சுமந்தோர் பிணமாயினரே

நேரம் நெருக்க
ஊரே சுடுகாடாக
சுடுகாடும் ஊராக
புதைக்கும் இடமின்றி
நாய்க்கும் நரிக்கும்
புழுவுக்கும் புல்லுக்கும்
எம்மையே திண்ணக்கொடுத்தோமே

விழி திறக்கும் முன்னே
சிதறிய உடலாய்
வீதிக்கு வந்ததே
எம் பிஞ்சு உடல்
பச்சிளங்குழந்தை

இருந்தோரை இழந்து
ஏதுமின்றி எவருமின்றி
பிச்சைப் பாத்திரம் ஏந்தினரே
எம் சிறார்கள்

உணரும் முன்பே
புணரப்பட்டு
உன் இச்சைக்கு
எச்சம் ஆயினரே
எம் இனச் சிறுமிகள்


முள்வேலி முகாமில்
சோற்றுக்கு கையேந்தியே
நடை பயின்றனரே
எம் குழந்தைகள்

நஞ்சுக் குப்பிக்கும்
உலகம் பிச்சையிட்ட -உன்
துப்பாக்கி ரவைக்கும்
தம்மையே தந்து
விடுதலைக்கு விதையாயினரே
எம் விடுதலைப் போராளிகள் !


செயற்கை மரணம் இல்லா
வீடில்லை
இயற்கை மரணமே
எம்மினத்திற்கில்லை என்றானதே

இத்தனையும் செய்துவிட்டு
மறக்கக் கேட்கிறாய்
வலி போகும்
வடு போகுமா?