Thursday, November 3, 2011

நீர்த்துளி!!!


கைநீர் அள்ளி முகம் கழுவினேன்,
முகந்துடைத்தேன்,
கைத்துடைத்தேன்.
ஒளிந்து கொண்டன சில துளிகள்
என் கைரேகை இடுக்கில்!!!

Thursday, October 27, 2011

முயற்சி கொள், முடிவில் வெல்!!!

தொடுக்கப்பட்ட அம்பெல்லாம்
இலக்கை கொய்வதில்லை,
விடுக்கப்பட்ட கேள்விக்கெல்லாம்
விடை கிடைப்பதுமில்லை.
தொடுப்பதும் விடுப்பதும்
முடிவாக அல்ல
முயற்சியாக!

பூத்த பூ
பூமி சுற்றும் வரை
வாழ்வதில்லை.
பூ உதிர்ந்தால்
பூ சுமக்கும் செடி
மரிப்பதில்லை.
பூ பூப்பது
மடிவதற்காக அல்ல
மணப்பதற்காக!

கட்டும்போது
தாங்கும் மலரே
மாலையாகிறது.
வெட்டுப்பட
ஏங்கும் மரமே
வாசல் நிலையாகிறது.

வலியில்லா வாழ்க்கை
வளம் பெறுமா?
வலியில்லா வாழ்வுதான்
வலி பெறுமா?

தோல்வியின் விளிம்பில்தான்
வெற்றியின் வேர்கள்
தொடங்குகின்றன.
தோல்வியில் மிரண்டால்
வெற்றியின் விதைகள்
வேர் விடுவதில்லை.

வெட்ட வெட்ட நீள்வோம்...
தோல்வி தோற்கும் வரை
வெற்றி கிட்டும் வரை!!!

Wednesday, October 19, 2011

என் கவிதை வரும் நேரம்


எழுத நினைக்கும் போதெல்லாம்
நீ என்னிடம் வருவதில்லை,
கூட்ட நெரிசலிலும்
ஓட்ட அவசரத்திலும்
அவ்வப்போது வந்து செல்கிறாய்.
தலைப்பிட்டு தொடங்கினால்
தலைப்பின் எதிர்புறம் செல்கிறாய்.
முடித்து விட்டு தலைப்பை தேடினால்
முரண்பாடாய் நினைவில் வருகிறாய். 
முதல் வரியில் அழகாய்
முளைவிடுகிறாய்
முன்னோக்கி எதனால் நகர மறுக்கிறாய்?
எதிர்பாரா தருணங்களில்
நிமிடங்களில் நிரம்பி விடுகிறாய்,
காத்துக்கிடக்கையில்
சுலபத்தில் சிக்க மறுக்கிறாய்.
உள்ளிருப்புப் போராட்டமெல்லாம்
நடத்திப்பார்க்கிறாய்!

உணர்ச்சிக் கவிதை எழுத நினைத்தால்
புணர்ச்சி வரிகளாய் வந்து நிற்கிறாய்,
எழுச்சி வரிகள் தேடி திரிந்தால்
கிளர்ச்சி வரிகளாய் சிரித்து செல்கிறாய்.
நிலவுடமையில் நுழைந்து
பொதுவுடமையை கையிலெடுத்தால்
பெண் இடையில் கொண்டு போய் சேர்க்கிறாய்,

வார்த்தையாய் நீ வரும் போது
சேகரிக்க தாள் கிடைப்பதில்லை
தாள் கிடைக்கும் நேரம்
பேனா மை கிடைப்பதில்லை
எல்லாம் இருக்கும் நேரம்
எனோ நீ வருவதில்லை.
எப்படியோ உன் ஒத்துழையாமையாலும்
இன்று எனக்கோர் கவிதை கிடைத்தது!!!

Tuesday, October 18, 2011

உறவும் முறையும்

திருமண நிகழ்வொன்றில்
இவங்களை தெரியலையா? என்று
உறவுமுறையை
விளக்கத் தொடங்கினால் அம்மா.
ஒன்றுவிட்ட என்று தொடங்கி
அவங்களோட இவங்களோட
என்று இடையிடையே
தெரிந்த தெரியாத உறவுகளையும்
உள் நுழைத்து
ஒரு வழியாய் முடிப்பதற்குள்
முன்னூறு நொடிகளை
முழுங்கியிருந்தாள்.
கடைசிவரை சொல்லவே இல்லை
எப்படி அழைப்பது என்றோ
என்ன முறை என்றோ.
அத்தை என்றழைக்கலாமா?
அக்கா என்றழைக்கலாமா?
பெண் இருந்தால் என்ற பேராசை
மட்டும் குத்தாட்டம் போட்டது.
எதற்கும் இருக்கட்டும் என்று
நல்லாயிருக்கிங்களா என்று வெறுமனே
கேட்டு வைத்தேன்.

Thursday, October 6, 2011

நான் தொலைந்திருந்த அந்த நிமிடம்!

திரைச் சீலையில்
மறைந்து கொண்ட நான்,
தேடிக் கண்டுபிடித்த மழலை,
அந்த ஒரு நிமிடம்
நான்
தொலைந்துதான் போயிருந்தேன்!.

Sunday, October 2, 2011

குடைக்குள் நிலவு!

குடை விரிந்ததும்
வானம் மறைந்தது

நிலவு
மறையவில்லை.
குடைக்குள் நிலவு!

Tuesday, September 27, 2011

எட்டு நாள் வாழ்க்கை !!!

சிரித்துக் கொண்டே பிறக்கிறேன்
சற்று நேரத்திலெல்லாம் நடக்கிறேன்.
அந்த நாள்
என் வலக்கை
இடப்பக்கமாக இருந்த ஞாபகம்!

நள்ளிரவு மழை
இரட்டை வானவில்
ஒற்றை நிறத்தில் !

சிரித்துக் கொண்டே செல்லும் சிற்பம்
முறைத்துக்கொண்டே மூச்சு விடும் சித்திரம்

தெளிந்த குட்டையில்
குழம்பிய மீன்கள்
மனிதர்களுக்கு வலை வீசுகின்றன !

ஆண்களில்லா தேசத்தின் வீதியில்
பெண்ணொருத்தி
குழந்தை தூக்கி என்னை கடக்கிறாள் !

நடந்து முடிக்கையில்
நனைந்தும் முடித்திருக்கிறேன்

வெள்ளை புரவி வேட்டைக்குச் செல்ல
நான் தேரிழுக்கிறேன். - அங்கே
புலியொன்று புல் மேய
மானொன்று அதன் மேல் பாய
அருகே
களிறொன்று கயிறோன்றால் தூக்கிலிடப்படுகிறது!

வேட்டை முடிந்து புரவி மன்னன்
கோட்டை திரும்புகிறான்

கோட்டையில்,
கருத்த கிழவி வெளுத்த உடையில்
தன் மகனை கொன்ற
புரவி மகனுக்கெதிறாய் மணியடிக்கிறாள்

தேர்க்காலில் இடப்பட்ட
புரவி மகனின் தண்டனையை நிறைவேற்ற
நானே தேரிழுக்கிறேன்

கூரான பூ ஒன்று
என்னை குத்திக் கிழிக்கிறது

தண்டித்ததன் தண்டனையாய்
வாரத்தின் எட்டாவது நாள்
செத்து விழுகிறேன்

நட்டநடு இரவில்
சட்டென்று கண் விழிக்கிறேன்
கலைந்து போனது
எட்டு நாள் வாழ்க்கை!